December 11, 2019
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் , என்ற பாடல் வரியை கேட்டு , கடந்து போகும் நம்மால், நினைப்பதை நடத்தி காட்டும் ஆற்றல் உண்டா என்றால் சந்தேகமே … ஆனால் எண்ணம் அது திண்ணமானால் முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீதர்..
சூரியன் மறையும் வேளையில், பளிரென சிரித்த முகத்துடன் , தள்ளாடும் வயதிலும், மன தைரியத்துடன், தனது பழைய தள்ளு வண்டியில், உணவுப் பொருட்களை கொண்டு வரும் கனகா பாட்டியை , ஆட்சியர் அலுவலகம் அருகே, கருணையோடு பார்த்து செல்பவர்கள் ஏரளாம்.அவரது வறுமையை மறந்து, ஆத்மார்த்தமாக பேச , ஒரு ஜீவனாவது வராத என்ற ஏக்கமும், தந்தையை இழந்த தனது, பேரப்பிள்ளைகள் வாழ்க்கையை, சந்தோஷமாக அமைய வேண்டும் என்ற வேட்கையும் , கண்களில் மின்னி , இதயத்திற்குள் இடியாய் இறங்கியதால், சுருங்கிப்போன தேகத்தை பார்ப்பவர்களுக்கு புரியாது பாட்டியின் வேதனை.
1982 ஆம் அண்டு முதல், இரவில் ஆட்சியர் அலுவலகம் அருகே தள்ளு வண்டியில் இட்லி கடையை நடத்த தொடங்கினார் கனகா பாட்டி. இவரது கணவர் 18 வருடங்களுக்கு முன்பே இறந்து விட , தனது இரு மகள்கள் மற்றும் ஒரு மகனுக்கும் , பாட்டியே சிரமப்பட்டு திருமணம் செய்து வைத்துள்ளார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மகன் இறந்துவிட , ஒடிந்து போன பாட்டி , அவரது மகனின் குழந்தைகளுக்காக தள்ளாத வயதிலும் கடினமாக உழைத்து வருகிறார். எனது வாழ்க்கையின் லட்சியமே , பேரப்பிள்ளைகளை நன்றாக படிக்கவைக்க வேண்டும் , என இதயப்பூர்வமாக , சொல்லும் பாட்டியின் கண்களில் கண்ணீர்த்துளிகள், எட்டிப்பார்த்தது.
பேரன் ,11 ஆம் வகுப்பு படிப்பதாகவும், பேத்தி கல்லூரியில் முதலாமாண்டு படிப்பதாக புன்னைகையோடு கூறினார். அவர்களை கரை சேர்த்தும் வரை இந்த ஜீவன் ஓயப்போவதில்லை என்பது மட்டும் நிதர்சனம்.ஒரு நாள் இரவில், கடைக்கு சாப்பிட வந்தவர், என்ன பாட்டி கடை ஒரே அழுக்கா இருக்கு , சுத்தமா வைக்க முடியாத என கேள்வி எழுப்பியுள்ளார். வறுமையோடு வாடிப்போன பாட்டியும், வருகின்ற வருமானம் செலவுக்கே சரியா, இருக்கு , கடையை புதுப்பிக்க இப்போதைக்கு முடியாது தம்பி என ஏக்கத்துடன் கூறியுள்ளார். பாட்டியின், கருணையான கண்களில் , அணைந்த வெளிச்சம் மட்டுமே , திரும்ப திரும்ப சாப்பிட வந்தவருக்கு, நியாயபகத்திற்கு வந்துள்ளது. தள்ளு வண்டி கடையின் நியாபகத்தால் , தூங்காமல் பாட்டியின் நினைவாகவே இருந்துள்ளார்.
நல்லதை நினைத்தால் உடனே செய்து விடு, தாமதப்படுத்தாதே என்ற எண்ணத்தோடு , மறுநாள் மாலையில் , பாட்டியை சந்தித்து தான் ஒரு கடை அமைத்து கொடுத்தால் வாங்கிக்கொள்வாயா? எனக்கேட்டுள்ளார். பாட்டியும் அரை மனதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பாட்டியின் கடையில் இலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும் , பயன்படுத்திய தட்டுகளை போடவும், தனியாக ஒரே டேபிளில் , மூன்று அடுக்குகளை அமைத்தும், உணவு சமைப்பதற்கும், வைப்பதற்கும் புதிய தள்ளுவண்டியையும் 50 ஆயிரம் செலவில் , பாட்டியின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் நன்கொடையாக அளித்தார்.
நெகிழ்ச்சியோடு வாங்கிய பாட்டியிடம் தனது அப்பா சீனிவாசன் அவர்களின் நினைவு நாளில் வாங்கி கொடுத்ததாகவும், இன்று சாப்பிடும் அனைவருக்கும் காசு வாங்க வேண்டாம் எனவும், அதற்கான தொகையை தான் கொடுப்பதாக வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீதர் கூறியுள்ளார். பாலாஜி ஸ்ரீதரின் அம்மா மற்றும் உறவினர்கள் பாட்டிக்கு சேலை கொடுத்து வாழ்த்தியதோடு , உணவருத்திச்சென்ற சம்பவம், பாட்டியின் கண்களில் ஆனந்த்தக் கண்ணீரை வரவழைத்தது.
வாழ்ந்த போது உதவாத காசு , செத்த பிறகு எதற்கு என கேள்வி எழுப்பியவர், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், கனகா பாட்டியின் கடையில் இருந்து வரும் கழிவுகள் சாலையில் ஓட விடாமல், சாக்கடைக்கு செல்ல வழிகாட்டியாச்சு என்றார்.
இட்லியின் சுவை , அவரது வறுமையை மாற்றி இருக்கிறது. வழக்கறிஞர் பாலாஜி ஸ்ரீதர் என்ற நல்ல உள்ளத்தால்… இன்னும் அவரது சேவைகள் தொடர வாழ்த்தி மகிழ்வோம். நெஞ்சார்ந்து.