December 4, 2019
கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் கல்லூரியில் வணிகவியல் துறை துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் முன்னாள் மாணவிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கோவை அவினாசி சாலையில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் கடந்த 1970ம் ஆண்டு வணிகவியல் துறை துவங்கப்பட்டது. இத்துறை துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது இத்துறையில் 2 ஆயிரத்து 400 மாணவிகள் பயின்று வரும் சூழலில், வணிகவியல் துறையின் பொன்விழா கொண்டாட்டம் இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் நந்தினி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கலந்து கொண்டு, இக்கல்லூரியிப் வணிகவியல் துறையில் பயின்று தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் 50 பெண்களுக்கு தொழில்முனைவோர் விருதினை வழங்கி கவுரவித்தார்.
விழாவில், கோவை கலைமகள் கல்லூரியின் செயலாளர் சின்னராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
கிருஷ்ணம்மாள் கல்லூரி என்றவுடன் மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் நன் நடத்தை தான் அனைவருக்கும் நியாபகம் வரும். அரசுத்துறைகளிடம் இருந்து பல்வேறு அங்கீகாரங்களை இக்கல்லூரி பெற்றுள்ளது. தரமான கல்வியை வழங்க இக்கல்லூரி நிர்வாகம் முழு முனைப்புடன் பணியாற்றி வருகிறது. இந்த பொன்விழா நிகழ்ச்சியில் அனைத்து மாணவிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் முதல்வர் நிர்மலா, செயலாளர் யசோதாதேவி, கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.