December 3, 2019
தண்டோரா குழு
கோவையில் 16வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரண்டைந்த மணிகண்டனை வருகின்ற 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மகிளா நீதிமன்ற நீதிபதி ராதிகா உத்திரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாட்டம் முடித்து சீரநாயகன்பாளையத்தில் உள்ள பூங்காவிலிருந்து தனது உறவினருடன் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த 11ஆம் வகுப்பு சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த 6பேர் வழிமறித்து ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று ஆடைகளை அகற்றி மொபைலில் வீடியோ பதிவு செய்ததுடன், பாலியல் வன்கொடுமை செய்தனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்ததையடுத்து, மேற்கு பகுதி ஆர்.எஸ்.புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அதேப்பகுதியை சேர்ந்த ராகுல், பிரகாஷ், கார்த்திகேயன், நாராயணமூர்த்தி ஆகிய நால்வரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான மணிகண்டன் என்பவர் கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று காலை 11.30 மணியளவில் சரணடைந்தார். அவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி என்பவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கார்த்தி மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. பொது இடத்தில் ஆடைகளின்றி மோசமாக பாலியல் வன்கொடுமை செய்வது, பாலியல் துன்புறுத்தல், ஆடைகள் இன்றி ஆபாசமாக மொபைலில் காட்சிப்படுத்துதல், கூட்டாக குற்றத்தை செய்ய தூண்டுதல் என 4 பிரிவுகள் போக்ஸோ சட்டத்தின் படி மற்றும் 354 IPC – மானபங்கம் படுத்துதல், 506(2) IPC – கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி ராதிகா முன்பு சரணடைந்த மணிகண்டனை வருகின்ற 17 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிட்டார்.