December 3, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் கண்ணப்பன் லே அவுட்டில் கருங்கல் சுற்றுச்சுவர் இடிந்து 4 வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், சுற்றுச்சுவரைக் கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.இதையடுத்து இச்சம்பவத்தில் வீட்டை சுற்றி காம்பவுண்ட் சுவர் கட்டியிருந்த உரிமையாளர் சிவசுப்ரமணியன் மீது விபத்து ஏற்படுத்துதல்,பொதுசொத்துக்கு சேதம் ஏற்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவசுப்ரமணியத்தை கைது செய்தனர்.
இந்த விபத்தில் செல்வராஜ் என்ற டீக்கடை தொழிலாளரின் கல்லூரி படிக்கும் மகள் நிவேதா மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் ரங்கநாதன் ஆகியோரும் உயிரிழந்தனர். செல்வராஜின் மனைவி லட்சுமி பல ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்து விட்டார். இதனால் இரு குழந்தைகளையும் மனைவியின் தங்கையான சிவகாமி வளர்த்து வந்துள்ளார். விபத்து நடந்து போது சித்தி சிவகாமி வீட்டில் தூங்கிய நிலையில் கருங்கல் சுற்றுசுவர் சாய்ந்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.செல்வராஜின் வீடு விபத்து நடந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வராஜ்,
சம்பவத்தன்று நான் டீ கடையிலேயே தங்கிவிட்டேன். காலையில்தான் சுவர் இடிந்து மகனும், மகளும் உயிரிழந்தது எனக்கு தெரியவந்தது. இப்போது யாரும் இல்லாமல் அனாதையாக இருக்கின்றேன்.இறந்து போன எனது மகன், மகள் ஆகிய இருவரின் 4 கண்களையும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் தானம் வழங்கிவிட்டேன் என்று கூறியுள்ளார்.