December 2, 2019 தண்டோரா குழு
உலகெங்கும் டிசம்பர் 1ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வையும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் விதமாக கோவை ரோட்டராக்ட் சங்கம் 3201 சார்பில் வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
இதில் சுமார் ஐம்பது இருசக்கர வாகனங்களும், 10 கார்களும் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி நடத்தினர். கோவை சாய்பாபா காலனியில் தொடங்கிய இந்த பேரணியானது வீரகேரளம், தொண்டாமுத்தூர், மாதம்பட்டி, ஆலந்துறை, வழியாக காருண்யா நகரை அடைந்தது. மேலும் செல்லும் வழியெங்கும் ஆங்காங்கே நிறுத்தி தெருக்கூத்து நாடகங்கள் மூலமாகவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த வாகன பேரணியை Rtn.காட்வின் மரிய விசுவாசம் (மண்டலத் தலைவர்- இளைஞர் சேவை), Rtn.ஹென்றி அமல்ராஜ் மற்றும் மாவட்ட ரோட்டராக்ட் சங்கம் 3201 பிரதிநிதி அஜய் சங்கர் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த விழிப்புணர்வு வாகன பேரணி, ரோட்டராக்ட் சங்கம் 3201-குரூப்1 பிரதிநிதி கீர்த்தி விவேக் மற்றும் முகமது அப்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.