November 30, 2019
நள்ளிரவில் குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி ரகளையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். காந்திபுரம் 9 வது வீதியில் லேப்டாப் சேல்ஸ் அண்டு சர்வீஸ் செண்டர் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவை சிவானந்தா காலனியில் மது போதையில் தனது சுவிப்ட் காரில் வேகமாக வந்தவர் ஆனந்தா பேக்கரி எதிரே இருந்த கட்சி கொடி கம்பங்கள் மீது காரை மோதிவிட்டு வேகமாக சென்றவர் முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீதும் மோதிவிட்டு மேட்டுப்பாளையம் சாலையில் வேகமாக சென்றுவிட்டார்.
இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் சிவானந்தா காலனி வழியாக வந்த ஸ்டீபன் ராஜின் காரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்தனர்.அப்போது அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்த ஸ்டீபன் ராஜ், அவர்களை தாக்கவும் முற்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த ரத்தினபுரி போலீசார் ஸ்டீபன் ராஜை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களுடனும் ஸ்டீபன் ராஜ் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட, ஒரு கட்டத்தில் போதை தலைக்கு ஏறி, காரில் இருந்த லேப்டாப்பை எடுத்து கீழே போட்டு உடைத்துவிட்டு, கழுத்தில் இருந்த செயினையும் அறுத்து ரோட்டில் வீசி போலீசாரிடம் ரகலையில் ஈடுபட்டார்.
இறுதியில், ஒரு வழியாக அவரை அடக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி ரத்தினபுரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தற்போது ஸ்டீபன் ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.