November 27, 2019
தண்டோரா குழு
கோவை உக்கடம் பகுதிலுள்ள ஜிஎம் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வாரத்திற்கு ஒரு முறை குடிநீர் மூன்று மணிநேரத்திற்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தினக்கூலி வேலைக்கு செல்பவர்களே அதிகமாக இருப்பதால், குடிநீர் வருகின்ற நேரத்தில் பிடிக்க முடியாமல் போவதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதாக கூறி 50 க்கும் மேற்பட்ட பெண்கள், பாட்டில்கள் மற்றும் கேன்களில் சாக்கடை நீரை கொண்டு வந்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்த முயன்ற போதும், அவர்கள் கொண்டு வந்த சாக்கடை நீரை கீழே கொட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஆறு மாதமாக குடிநீரோடு சாக்கடை நீர் கலந்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.
குடிநீர் வரி உயர்த்திய மாநகராட்சி சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வழங்கி வருவதாகவும், வரி கட்டவில்லை என்றால் அபராதம் விதிக்கும் மாநகராட்சி மக்களை கண்டு கொள்வதில்லை எனக்கூறி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.