• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ஜி.எச்சில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேண்டீனால் நோய்த்தொற்றும் பாதிப்பு – சமூக ஆர்வலர்கள் வேதனை

November 20, 2019

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள நவீன கழிப்பிடம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள கேண்டீனால் உணவருந்துபவர்களுக்கு நோய்த்தொற்றும் பாதிப்புகள் அதிகமாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் 5 ஆயிரம் முதல் 7000 வெளிநோயாளிகளும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.அதே போல இங்கு கோவை உட்பட திருப்பூர் ஈரோடு நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா போன்ற மாநிலத்தில் இருந்து வந்தும் பலர் சிகிச்சை பெறுகின்றனர்.இப்படி சிகிச்சைக்கு வருபவர்களுக்கும், நோயாளியின் உறவினர்களுக்கும் தேனீர்,சிற்றுண்டிகள் மற்றும் உணவுகள் உண்ண சுகாதாரமான கேண்டீன் வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வந்தது.

இப்படியிருக்க பழைய 95வது வார்டுக்கு எதிர்ப்புறம் இருந்த கேன்டீன் ஆனது கடந்த சில மாதங்களுக்கு முன்பு புது வடிவத்துடன் பழைய ட்ரோமோ வார்டுக்கு எதிர்ப்புறம் உள்ள நவீன கட்டணக் கழிப்பிடம் அருகே தொடங்கப்பட்டது. இந்த கழிப்பிடம் ஆனது ஏற்கனவே சுகாதாரமற்ற முறையில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் அதன் மிக அருகிலேயே இந்த கேண்டீன் துவங்கப்பட்டுள்ளதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்காக வருபவர்களும் நோயாளியைப் பார்க்க வருபவர்களும் இதுபோன்ற சுகாதாரமற்ற முறையில் இருக்கும் உணவகங்களில் உண்டு புதிதாக நோய்களை உருவாக்கிக்கொள்ள இது வழிவகுக்கிறது எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ரஹ்மான் கூறுகையில்,

பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் கோவை அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் அருகிலேயே கேண்டீன் செயல்படுவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல.மருத்துவமனை நிர்வாகமும், சுகாதார ஆய்வாளரும், உணவு பாதுகாப்பு துறையும் இந்த சீர்கேட்டை கண்டு என்ன செய்து கொண்டிருக்கிறது.இந்த கேண்டீன் ஆனது கழிப்பிடம் அருகிலேயே இருப்பதால் நோய்த் தொற்றும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

ஆகவே பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு எதிரான இந்த கேண்டீனை வேறு இடத்திற்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க