November 12, 2019
தண்டோரா குழு
கோவையை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கோவை உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றினார். கடந்த 1997-ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி அவர் பணியில் இருந்த போதும் மூன்று பேர் ஒரே பைக்கில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய செல்வராஜ் அவர்கள் அபராதம் பெற காரணமாக இருந்தார். இதனால் செல்வராஜிற்கும் அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த பின் செல்வராஜ் சிலரால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்பு தான் கோவையில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தது. போலீஸ் ஏட்டு கொலை செய்யப்பட்ட போது அவருக்கு பிறந்து சில மாதங்களே ஆன லாவண்யா என்ற பெண் குழந்தை இருந்தது.
அந்த பெண்ணுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது லாவண்யாவுக்கு 21 வயது முடிந்து விட்டதால் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் ராஜாமணி பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்து லாவண்யா நேற்று பணியில் சேர்ந்தார். பின்னர் அவர் தனது தாயுடன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரணை சந்தித்து வாழ்த்து பெற்றார்.