October 16, 2019
தண்டோரா குழு
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் ப.சிதம்பரத்தை கைது செய்தது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது.
இதையடுத்து, அவருடைய காவல் முடிவடைந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இதற்கிடையில், சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, இன்று காலை 3 அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறைக்கு சென்று விசாரணை நடத்தினர்.
சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளது. திகார் சிறையில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட இருப்பதாக கூறப்படுகிறது.