October 11, 2019
தண்டோரா குழு
கோவை அருகே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தை காணாமல் போன வழக்கில் குழந்தையை கண்டுபிடித்து தரக்கோரியும், விசாரணை என்ற பெயரில் கிராமவாசிகளை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார்.(36). இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு வெற்றிவேல் (7) என்ற மகனும் சாமினி என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். ஜெயக்குமார் அவரது மனைவி கவிதா அதே ஊரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ம் தேதி வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த சாமினி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் குழந்தை காணாமல் போய் ஏழு நாட்கள் ஆகியும் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனிடையே குழந்தையை விரைந்து கண்டுபிடித்து தரக்கோரியும், விசாரணை என்ற பெயரில் கிராமவாசிகளை காவல் துறையினர் அடித்து துன்புறுத்துவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.