October 4, 2019
தண்டோரா குழு
மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெற வேண்டியது அவசியம் எனவும்,தற்போது இந்தியாவில் பெரு நகரங்களில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் புற்று நோய் ஆராய்ச்சி மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப் படுகிறது. இந்நிலையில் இந்நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக,கோவை பி.எஸ்.ஜி.மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலை பரிசோதனைகள் இலவச முகாம் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை புற்றுநோய் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பாலாஜி , கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர் மல்லிகா விஜயகுமார் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சிவகுமார் குப்புசாமி ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது, இந்தியாவில் பெரிய நகரங்களில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக இளம் பெண்கள் அதிக அளவில் மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் தாக்குதலுக்கு உள்ளான 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், 50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதை குறிப்பிட்டனர்.வாழ்க்கை முறை மாற்றம், மேற்கத்திய உணவு முறை, தாமதமான திருமணம், தாமதமான கருத்தரிப்பு, மரபணு மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, நகரமய மாக்கல் அதிகரிப்பு, உடல் பருமன், போன்றவைகளால் மார்பகப் புற்றுநோய் தற்போது அதிகரித்து வருவதாக கூறிய மருத்துவ குழுவினர், இதற்கு ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டியது அவசியம் என தெரிவித்தனர்.மேலும் இந்த மாதம் முழுவதும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் இலவச மார்பகப் புற்று நோய் பரிசோதனை முகாம் நடை பெற உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது மருத்துவர்கள் மோகன்ராஜ்,கிருபாசங்கர்,ரமேஷ் சந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.