September 21, 2019
தண்டோரா குழு
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் சார்பாக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் முன் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வார காலமாக நாடு முழுவதும் பாஜகவின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் ஏழை எளிய குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
இதேபோல் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட இதர பிறப்படுத்தப்பட்டோர் அணியின் சார்பாக சிங்காநல்லூர் பஸ் நிலையத்தின் முன் 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இக்கன்றுகளை அங்கு இருக்கும் கடையின் உரிமையாளர்கள் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் பஸ் நிலைய தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஓபிசியின் தலைவர் உதயகுமார், துணை தலைவர் பரிசோத்,செந்தில், பொது செயலாளர் இளங்கோ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.