September 17, 2019 தண்டோரா குழு
அமமுக தான் ஆரம்பித்த கட்சியென சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை எனவும், இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டுமென புகழேந்தி கூறியுள்ளார்.
பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு, அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புகழேந்தி,
அமமுகவில் இருந்து தன்னை டிடிவி தினகரன் நீக்கிவிட்டதாக சொல்லவில்லை. அமமுகவில் தொண்டர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்ட செயலாளர் தவறான தகவல் அளித்ததால் பலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.அமமுக தொண்டர்கள் கொத்துக்கொத்தாக கட்சியில் இருந்து வெளியேறி வருகின்றனர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அமமுக மாவட்ட செயலாளர்கள் தோற்றுபோய் விட்டனர்.மண்டல பொறுப்பாளர்களால் கட்சி பாதி அழிந்து விட்டது.நாளுக்கு நாள் தொய்வு அடைந்து வரும் கட்சியை டிடிவி தினகரன் சரி செய்யாதது வருத்தமளிக்கிறது. வேறு கட்சியில் இணைவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.யாரோடும் பேசவில்லை. அமமுக நான் ஆரம்பித்த கட்சியென ஆதங்கத்தில் சொன்னேன். கட்சிக்காக அவ்வளவு கஷ்டப்பட்டுள்ளேன் என்பதால் அப்படி சொன்னேன்.இதற்கு டிடிவி தினகரன் தான் பதிலளிக்க வேண்டும். தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க தயார். விசாரணைக்காக டிடிவி தினகரன் இதுவரை அழைக்கவில்லை. அமமுக எனது கட்சி என்று சொல்லியதில் எந்த மாற்றமும் இல்லை என புகழேந்தி தெரிவித்தார்.
சசிகலாவிற்கு ஆதரவாக முதல் முதலாக குரல் கொடுத்தது நான் தான்.
இல்லையெனில் டிடிவி தினகரனுக்கு மனசாட்சி இருந்தால் எங்கியிருப்பார் என்பதை அவரே சொல்லட்டும். முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மாதிரியான ஆட்கள் இயக்கத்தை அழிக்க வந்தவர்கள்இது டிடிவி தினகரனுக்கு நன்றாக தெரியும். நான் மேடையேறும் போது வெற்றிவேல், பழனியப்பன் எங்கிருந்தார்கள் என தெரியவில்லை. சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக புத்தகம் எழுத உள்ளேன். அதில் பல உண்மைகள் வெளிவரும். உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட முடியாது. நவம்பரில் வரும் உள்ளாட்சி தேர்தலில் களம் காண்போம் எனவும் அவர் தெரிவித்தார்.