August 26, 2019 தண்டோரா குழு
வேதாரண்யத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்த கட்சியினர் ஊர்வலமாக வந்து ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நேற்று இரு பிரிவினரிடம் ஏற்பட்ட மோதலை அடுத்து போலீரோ வாகனம் எரிக்கப்பட்டு, டாக்டர் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அம்பேத்கர் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு சேலத்திலிருந்து அம்பேத்கரின் வெண்கல சிலை,வேதாரண்யத்திற்கு கொண்டு வரப்பட்டு , இன்று காலை அதே இடத்தில் நிறுவப்பட்டது. சிலையை உடைத்ததாக காவல் துறையினர் இதுவரைக்கும் 50 பேரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிலையை உடைத்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி, கோசங்களை எழுப்பியவாறு வந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து மண்டல செயலாளர் சுசி கலையரசன் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது,
டாக்டர் அம்பேத்கர் பெண்களுக்கு சம உரிமை வேண்டுமெனவும், அனைவருக்கும் எட்டு மணி நேர வேலை, குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தவர் எனவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி கொடுத்தவர் என தெரிவித்தார். அனைத்து தலைவர்களுக்கும் சிலை இருக்கும் போது தமிழகத்தில் அம்பேத்கருக்கு சிலை இல்லை எனக்கூறினார். மேலும் அம்பேத்கர் சிலையை உடைத்த சாதி வெறியர்களை வன்கொடுமை மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என தெரிவித்தார். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்பேத்கர் சிலை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தை கள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்தனர்.