August 9, 2019
தண்டோரா குழு
நீலகிரி், கோவை, தேனி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்கு பருவ காற்று வலுவாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மோதி வீசுகிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, கோவை, நீலகிரியில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகம் மற்றும் புதுவை இதர பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.மேலும், தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 91 செ.மீ., மேல்பவானியில் 45 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் மற்றும் கடற்கரை பகுதிகளில் இரு நாட்களில் மணிக்கு 40 – 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்