August 6, 2019
தண்டோரா குழு
கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் பெண் காவலர் தன்னை மிரட்டி பணம் கேட்பதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக இருந்து வருகின்றார். இந்நிலையில் இவரது டிராவல்ஸ் நிறுவனத்தில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் பணபுரிந்த கவிதா என்ற பெண் காவலருடன் தனிமையில் இருந்த சிசிடிவி காட்சிகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. கவிதாவும் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையில்,சிசிடிவி காட்சிகள் வெளியாகியது குறித்து கோவை மாவட்ட காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்த அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து காவலர் கவிதா ஆயுதபடைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிசிடிவி விவகாரம் முடிவிற்கு வந்தது. இந்நிலையில் டிராவல்ஸ் அதிபர் சதீஷ்குமார் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து புகார் அளித்தார். அப்போது தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த மைதிலி என்பவர் மூலம் கவிதா என்ற பெண் காவலர் அறிமுகம் கிடைத்ததாகவும், அதன் பின் பெண்காவலருடன் பல இடங்களில் தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் தனது அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியானதாகவும் இதை காரணம் காட்டி கவிதாவும், மைதிலியும் தன்னிடம் பணம் பறித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார்.