August 5, 2019
தண்டோரா குழு
காஷ்மீரில் 10% இடஒதுக்கீடு, மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பின்னர் காஷ்மீர் தொடர்பான மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது. எதிர்கட்சிகளின் விமர்சனங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளித்தபின் மசோதாக்கள் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பிரதமர் மோடியும் மாநிலங்களவைக்கு வருகை தந்தார். முதலில் காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீடு மசோதா, ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.அதன்பின் மறுசீரமைப் பதற்காக, காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது. இம்மசோதாவுக்கு ஆதரவாக 125 ஓட்டுகளும், எதிர்ப்பு தெரிவித்து 61 ஓட்டுகளும் விழுந்தன. இதனையடுத்து இம்மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.