August 3, 2019
தண்டோரா குழு
மரங்கள் வளர்ப்பது மற்றும் குளங்களை தூர் வாருவது என நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான பல்வேறு பணிகளில் நல்லறம் அறக்கட்டளை அதிகம் ஈடுபட்டு வருவதாக அதன் தலைவர் அன்பரசன் தெரிவித்துள்ளார்…
தமிழகத்தில் இந்த ஆண்டிற்கான பருவமழை எதிர்பார்த்த படி இல்லாததால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான பணிகளில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த பணிகளை தனியார் அமைப்புகளும் செய்து வரும் நிலையில் கோவையில் நல்லறம் அறக்கட்டளை கோவை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் ஏரி,குளங்களை சுத்தப்படுத்துதல்,ராஜவாய்க்கல்களை தூர் வாருதல்,மரக்கன்றுகள் நடுவது என பல்வேறு பணிகளை செய்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாந்துறை பேரூராட்சி பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறுவானி பிரதான சாலையில் நடைபெற்ற இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக சேவகருமான திரு.அன்பரசன் மரக்கன்றுகள் நடும் பணிகளை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில்
நீர் ஆதாரங்களை பெருக்குவதில் மரம் வளர்ப்பது மற்றும் குளங்களை தூர் வாருதல் என கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள், தனியார் அமைப்புகள் என அனைவரும் இணைந்து மேற்கொண்ட பணிகளால் தற்போது நிலத்தடி நீர் மற்றும் உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் தற்போது இந்த பகுதிகளில் அநிகப்படியான மரக்கன்றுகள் நட உள்ளதாக அவர் கூறினார்.இந்த விழாவில் வாளையார் விஜய குமார்,மற்றும் ஆலாந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.