August 2, 2019
தண்டோரா குழு
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட நாட்டின் பிரதமராகலாம் என பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்ப்பதற்கான பணியை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் பிரச்சார வாகனம் மூலம் உறுப்பினர் சேர்ப்பதற்கான நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பாஜக மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து பாஜக தொண்டர்களிடையே பேசிய அவர்,
பாஜகவின் அடிப்படை உறுப்பினர் கூட நாட்டின் பிரதமராகலாம் எனக் கூறினார். நதிகளை தேசிய மயமாக்குவதில் பிரதமர் மோடி உறுதியாக இருப்பதாக கூறிய அவர், தமிழகமும் தேசியக் கட்சியின் பின்னால் நிற்க வேண்டும் என வலியுறுத்தினார். கோவை சிறுவர் சிறுமியர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது மிகச் சரியான தீர்ப்பு என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நீதி நிலை நாட்டப்பட்டு இருப்பதாகவும் வானதி சீனிவாசன் கூறினார். வங்கிக்கடன் விவகாரத்தால் கோவை விவசாயி தற்கொலை செய்து கொண்டது குறித்து கருத்து தெரிவித்த அவர், இதுபோன்ற விவகாரங்களில் வங்கி நிர்வாகங்கள் கவனமுடன் செயல்பட வேண்டும் எனவும், எதற்கும் தற்கொலை தீர்வாகாது என பொதுமக்களும் விவசாயிகளும் புரிந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.