August 1, 2019
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் சைலேஷ் எத்திராஜ். மில் அதிபரான இவர் தனது குடும்பத்தினருடன் பெங்களுர் சென்று நேற்று கோவை திரும்பினார். பெங்களூர் செல்லும் போது வீட்டில் வேலை பார்த்து வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவரை வீட்டை பார்த்துக்கொள்ள சொல்லி விட்டு சென்றுள்ளார்.
ஆனால், அவர் எத்திராஜ் வீட்டில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளையும் 17 லட்ச ரூபாய் பணத்தையும் திருடி சென்றார்.திருடி சென்ற நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு இரண்டு கோடியே ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும்.எத்திராஜ் குடும்பத்துடன் பெங்களூர் சென்று விட்டு திரும்பிய போது வீட்டில் இருந்த நகை பணம் திருடப்பட்டு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து உடனடியாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் காவல் துறையினர், தலைமறைவாக உள்ள வீட்டில் பணியாளராக வேலை பார்த்து வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவரை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.கடந்த ஐந்தாண்டுகளாக மில் அதிபர் சைலேஷ் வீட்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிகாஷ்குமார் ராய் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை நம்பி விட்டு விட்டு வெளியூர் சென்ற நிலையில் இந்த திருட்டு நடைபெற்று இருப்பது குறிப்பிடதக்கது.