July 26, 2019
தண்டோரா குழு
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் இரவு நேரத்தில் உணவு தேடி வரும் காட்டுப் பன்றிகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் உள்ள மாதம்பட்டி தொண்டாமுத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் காட்டுப்பன்றிகள் உணவு தேடி சர்வ சாதாரணமாக சுற்றித்திரிகின்றன இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை தாக்கிவிடுமோ அல்லது இரவு நேரங்களில் வேலை நிமித்தமாக வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது காட்டுப் பன்றிகளால் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த பயத்துடன் உள்ளனர்.
மேலும் இதுபோன்று இரவு நேரங்களில் காட்டுப் பன்றிகள் ஊருக்குள் புகாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.