July 25, 2019
தண்டோரா குழு
கோவை வீரபாண்டி வால்குட்டை மலையடிவாரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஒரே இடத்தில் நிற்கும் 12 வயது பெண் காட்டு யானை – தண்ணீர் மற்றும் உணவு தர வனத்துறை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றனர் இவைகள் அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவிற்காக மலையடிவார பகுதியில் உள்ள ஊர்களுக்கு வரும் இதனால் இங்கு உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.இதுகுறித்து விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தருவர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வனத்துறையினர் யானைகளை விரட்டி மீண்டும் மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவர்.
இந்நிலையில் இந்த பகுதியில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு விநாயகர் மற்றும் சின்னத்தம்பி என்ற 2 காட்டு யானைகள் தொடர்ந்து விவசாய நிலங்கள் மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாக விவசாயிகள் கூறியதை தொடர்ந்து அந்த யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி விநாயகர் என்று யானையை முதுமலைக்கும், சின்னத்தம்பி என்ற யானையை ஆனைமலை மலைப்பகுதிக்கு கொண்டு சென்றனர். கடந்த ஆறு மாத காலமாக யானைகள் வருவது குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கணுவாய் அடுத்துள்ள சின்னதடாகம் அருகே வீரபாண்டி ஊராட்சி வால்குட்டை என்ற மலையடிவாரத்தில் 12 வயது மதிக்கதக்க பெண் யானை எங்கும் நடக்க முடியாமல் உடல்நலக்குறைவு அந்த பகுதியில் சுற்றி சுற்றி வந்துள்ளது.
அந்தப் பகுதியில் ஆடு மேய்க்கச் சென்ற மக்கள் யானையை பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானையை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அந்த யானை மிகவும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதால் அதற்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுக்க ஏற்பாடு செய்து வருகின்றனர் மேலும் அந்த யானை உடல் நிலை குறைவாக இருப்பதை பார்க்கும்போது ஒரு வேளை கர்ப்பமாக இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.