July 24, 2019
தண்டோரா குழு
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள ஏழாவது வீதி சந்திப்பில் மாநகராட்சி பணியாளர் ஒருவர் பல நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்த சாக்கடையை தன்னுடைய கைகளால் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் ஸ்மார்ட்சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு பல வகையான தொலைநோக்கு பார்வையுடன் நகரத்தை மேம்படுத்தி வருகின்ற நிலையில் இன்னும் பழைய கால முறைப்படி பாதாள சாக்கடை சரி செய்யப்படாமலும் சாக்கடையில் நீர் தேங்கி இருப்பது மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் நிரந்தரப் பணியாளர்கள் எவ்விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சுத்தம் செய்வது மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வாக உள்ளது. இன்று காலை காந்திபுரம் 100 அடி சாலையில் ஏழாவது வீதி சந்திப்பில் மணிமாறன் என்கின்ற மாநகராட்சி துப்புரவு பணியாளர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சாக்கடை நீர் தேங்கி இருந்த பகுதியில் எவ்விதமான உபகரணங்களும் இன்றி சாக்கடைக்குள் இறங்கி தன்னுடைய இரண்டு கைகளால் சாக்கடையை அடைத்து உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மண் போன்ற கழிவுப் பொருட்களை அள்ளி வெளியே போட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவ்வழியாக சென்ற தன்னார்வலர் டென்னிஸ் என்பவர் அப்பகுதி வழியாக செல்லும் பொழுது கைகளால் சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மாநகராட்சி பணியாளரிடம் இது போன்று பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுத்தம் செய்யக்கூடாது என்றும் உடனடியாக சுகாதார ஆய்வாளரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்து உள்ளதாக கூறினர். ஆனாலும் கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பொழுது தனியார் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் விஷ வாயு தாக்கி மாநகராட்சி பணியாளர்கள் உயிர்நீத்த சம்பவம் இன்னும் விலகாத நிலையில் மீண்டும் இது போன்ற நிகழ்வுகள் கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருவது வருத்தத்திற்குரியது இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவித்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.