July 23, 2019
தண்டோரா குழு
கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசியுள்ளார்.
கர்நாடகாவில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 15 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து, குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்என்று பா.ஜ.கவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனைத்தொடர்ந்து கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி கடந்த 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.
இதற்கிடையில், இன்று காலை 10 மணி முதல் மீண்டும் விவாதம் நடைபெற்று வரும் நிலையில் மாலை 4 மணிக்குள் விவாதங்களை முடித்துக்கொள்ள சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் குமாரசாமி,
நான் முதல்வராக காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி கர்நாடகாவில் உள்ள 6 கோடி மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்; தவறுகளை சரிசெய்யும் நேரம் இது. காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைந்த நாள் முதல் பாஜக குதிரை பேரத்தை தொடங்கியது அரசியலுக்கு வர ஆசை இல்லை என்றாலும் காலத்தின் கட்டாயத்தினால் அரசியலுக்குள் நுழைந்தேன். ஊழல் செய்து பின்வாசல் வழியாக ஆட்சியமைக்க பாஜக முயற்சித்து வருகிறது சட்டத்தில் விதி 10 குறித்தோ அல்லது வேறு சட்ட நுணுக்கம் குறித்தோ பேச விரும்பவில்லை வாழ்க்கையில் நான் பல தவறுகளை செய்துள்ளேன்; பல நல்ல விஷயங்களையும் செய்துள்ளேன். பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்தபோது எடியூரப்பா முதல்வராக வழி கொடுத்தேன் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது நான் துரோகம் செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலைவிட்டு விலக வேண்டும் என முடிவு செய்தேன்.ஆனால் குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த முடிவை கைவிட்டேன் என பேசினார்.