July 23, 2019
தண்டோரா குழு
தனியார் நிறுவனங்களில் 75% இடஒதுக்கீடு தரப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது நிறைவேற்றியுள்ளார்.
முதல் முறையாக ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்தது வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. தேர்தல் பிரச்சாரத்துக்காக பாதயாத்திரை மேற்கொண்டிருந்தபோது தனியார் துறைகளில் மாநில மக்களுக்கு வேலை வாய்ப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில்
திங்கள்கிழமை ஆந்திர மாநில சட்டப்பேரவையில் தனியார் நிறுவனங்களில் மாநில மக்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கியுள்ளார் ஜெகன். இதன் மூலம் தனியார் நிறுவனங்களில் ஆந்திர மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்துள்ளது.
அந்தச் சட்டத்தின்படி, அரசு தனியார் பங்களிப்பில் உருவாகும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், திட்டங்களில் உருவாகும் வேலை வாய்ப்புகளில் 75% ஆந்திரப் பிரதேச மக்களுக்கு வழங்கப்படவேண்டும். அந்த சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்துக்கு தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் கிடைக்கவில்லையென்றால் அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை அளிக்கவேண்டும். அதனால், தேவையான திறன் உள்ள ஆட்கள் ஆந்திராவில் இல்லை என்று வாதம் செய்ய முடியாது.
மேலும் இந்தியாவிலேயே இதுபோன்ற சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலம் என்ற பெருமையையும் ஆந்திரா தற்போது பெற்றுள்ளது. ஆந்திராவை போலவே மத்திய பிரதேச மாநிலத்திலும் தனியார் நிறுவனங்களில் 70% இடஒதுக்கீட்டினை உள்ளூர் மக்களுக்கு தரும் வகையில் சட்டமியற்றப்போவதாக சட்டப்பேரவையில் முதல்வர் கமல்நாத் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.