July 22, 2019
தண்டோரா குழு
போட்சுவானா நாட்டில், தந்தத்துக்காக யானையை கொடூரமாக கொன்ற போட்டோவை, ட்ரோன் ஒன்று படம்பிடிக்க, அது உலகையே உலுக்கியதுடன், சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
ஆப்பிரிக்கா வனப்பகுதியில் தந்தத்திற்காக வேட்டையாடப்பட்டு, முகம் முழுவதும் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு கிடக்கும் அந்த யானை உலக அளவில் தற்போது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காடுகளில் மரங்களின் பெருக்கத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரும் உதவியாக இருப்பவை யானைகள். ஆனால் தந்தத்திற்காக யானைகள் வேட்டையாடப்படுவது உலகம் முழுவதும் அதிக அளவில் நடந்து வருகிறது. இதற்கிடையில், தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்சுவானாவில் வேட்டை தடைச்சட்டம் சமீபத்தில் நீக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜஸ்டின் சல்லீவன், போட்ஸ்வானா பகுதிகளில் தனது ட்ரோன் கேமரா மூலம் எடுத்துள்ளார். Andrei Stenin International என்ற அமைப்பு நடத்திய புகைப்பட போட்டிக்காக அவர் எடுத்த இந்த புகைப்படம்தான் தற்போது பலரது மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பறக்கவிட்ட ட்ரோனில் எதிர்பாராத விதமாக இறந்து கிடந்த யானையின் சடலம் அவரது கண்ணில்பட்டது. யானையின் முகம் கொடூரமாக சிதைக்கப்பட்டு, ரம்பம் மூலம் துதிக்கை தனியாக துண்டிக்கப்பட்டு, தந்தம் வெட்டப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக அவரது ட்ரோன் கேமராவில் பதிவான இந்த காட்சிகள், தற்போது உலகையே உலுக்கி உள்ளது. பார்ப்பவர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்த இந்த புகைப்படத்திற்கு அவர் Disconnection என பெயரிட்டுள்ளார். Disconnection என்பது யானைக்கும் தும்பிக்கைக்குமான பிரிவு மட்டுமல்லாமல், வன விலங்குகளோடு மனிதர்களுக்குமான பிரிவையும் தான் குறிக்கும் என இதுகுறித்து வேதனையுடன் என ஜஸ்டின் சல்லீவன் தெரிவித்துள்ளார்.