July 19, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும். கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தளவில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு பகுதியில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழையும், கடலூர், வால்பாறை பகுதிகளில் தலா 9 செ.மீ., அரியலூர், புதுக்கோட்டை பகுதிகளில் தலா 5 செ.மீ., மழை பதிவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் நேற்று வரை பெய்த மழையின் அளவு 19 சதவீதம் குறைவாக உள்ளது எனக் கூறியுள்ளார்.