July 5, 2019
தண்டோரா குழு
தொழில்துறையினரின் 60 சதவீத எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளதாகவும் இருப்பினும் ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் இந்திய தொழில் வர்த்தக சபை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
2019-2020ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பொது நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சித்தாரமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இது தொடர்பாக இந்திய தொழில் வர்த்தக சபையின் கோவை பிரிவு தலைவர் லட்சுமி நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
புதிய தொழில் துவங்குவோருக்கு சலுகைகள் என்ற அறிவிப்பு வரவேற்க தக்கது. அதே சமயம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு புதிய அறிவிப்புகள் இல்லை. சிறு, குறு தொழில்துறையினருக்கு புதிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றம்
அளிக்கிறது. பெட்ரோல் டீசல் மீதான வரி உயர்வு காரணமாக அதன் விலை 2 ரூபாய் அளவிற்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது தொழில் துறையினருக்கு எந்த விதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்திய வர்த்தகத்தை 3 டிரில்லியன் டாலர் வர்த்தமாக உயரும் என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது. இதனால் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் பயனடையும் என்றும் ஒரே நாடு ஒரே மின் கிரிட் என்ற அறிவிப்பால் மின் கட்டணம் தமிழகத்தில் 1.50 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது. மேலும் பிளாஸ்டிக் மீதான இறக்குமதி வரி அதிகரித்துள்ளதால் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. மின் சக்தியில் இயங்கும் ஈ – வாகனங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது எனவும் அவர் கூறினார்.
மேலும்,ஒட்டுமொத்தமாக தொழில்துறையினரின் 60 சதவீத எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ள போதும் இருப்பினும் ஜி.எஸ். டி வரிவிதிப்பில் கோரப்பட்ட ஜாப் ஆர்டர்களுக்கான வரிவிதிப்பு ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.