June 25, 2019
தண்டோரா குழு
தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டி.ரத்னவேல், மைத்ரேயன், கே.ஆர். அர்ஜூனன், ஆர். லட்சுமணன், டி. ராஜா மற்றும் கனிமொழி ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலியாகிறது.
இதையடுத்து, தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை எம்.பி.க்களுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதுள்ள நிலையில் திமுக 3 எம்.பி.க்களையும், அதிமுக 3 எம்.பி.க்களையும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய முடியும்.
இதற்கான தேர்தல் ஜூலை 18-ம்தேதி நடைபெறுகிறது. தேர்தல் தேதி மற்றும் நடைமுறைகள் குறித்த அறிவிக்கை ஜூலை 1-ம்தேதி வெளியிடப்படும். ஜூலை 8-ம்தேதி வரை வேட்புமனுவை தாக்கல் செய்து கொள்ளலாம். 9-ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். ஜூலை 11-ம்தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். காலை 9 மணிக்கு ஆரம்பிக்கும் தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் ஜூலை 22-ம்தேதியுடன் முடிகிறது.