June 19, 2019
தண்டோரா குழு
நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23.06.2019 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், பாண்டவர் அணியின் மீதுள்ள அதிருப்தியால் அவர்களை எதிர்த்து சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இரு அணிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலை நிறுத்த தென்சென்னை மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. வரும் 23-ம் தேதி நடிகர் சங்கத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வரை தேர்தல் குறித்த நடிவடிக்கைகள் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.