June 17, 2019
தண்டோரா குழு
மேற்குவங்கத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தக்கோரி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 400 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நோயாளிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி மேற்குவங்கத்தில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் உறவினர்களால் கடுமையாக தாக்கப்பட்டதில் அவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் அரசு மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்ட 400 க்கும் மேற்பட்டோர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து, அரை மணிநேரம் பணியை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நோயாளிகளின் உயிரை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மீது அவ்வப்போது தவறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நோயாளிகளின் உறவினர்கள் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் இதனால் மருத்துவர்கள் அதிக அளவில் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். மேலும் தமிழகத்தில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் இருப்பது போன்று தேசிய அளவில் மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி இச் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனைகளையும் , மருத்துவர்களையும் தாக்கினால் ஜாமீனில் எளிதில் வெளியே வரமுடியாதபடி கடுமையான சட்டத்தை மத்திய அரசு இயற்ற வேண்டும் எனகோரிக்கை விடுத்தனர்.