June 13, 2019
தண்டோரா குழு
கோவையில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரசு பள்ளிகளை பாதுகாத்திடுதல், நீட் தேர்வை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல் துறை தடுப்புகளை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகள் உட்பட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.