June 6, 2019
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை மற்றும் மருத்துக்கல்லூரி முதல்வர் அசோகன் தெரிவித்தார்.
கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் நீபா வைரஸ் முன்னெச்செரிக்கை நடவடிக்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கேரளாவில் நிபா வைரசினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுச்சுகாதார துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிபா வைரஸ் வெளவால்கள் கடித்த பழங்களை உட்கொள்வதாலும், நிபா பாதித்தவர்களிடம் இருந்தும் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் கேரளாவிற்கு சென்று வருவதால் நிபா வைரஸ் பரவாது. சுகாதாரமான பழங்களை உட்கொள்ள வேண்டும். கைகளை கழுவி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கோவையில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் கூறினார்.
மேலும், நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வர வேண்டும்.கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் உரிய பாதுகாப்போடு செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.நிபா வைரஸ் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அரசு அறிவித்துள்ள 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு நோய் தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.