June 1, 2019
தண்டோரா குழு
கோவையில் தனியார் கல்லூரி பெண் பணியாளரை டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டதாலும், செல்போனில் அதிகநேரம் பேசிக் கொண்டிருந்ததாலும் பணியாற்றும் கல்லூரியிலேயே வைத்து கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (38). செண்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது
மனைவி நந்தினி (28). இவர் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கனகராஜ் மற்றும் நந்தினி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் நந்தினி டிக்டாக்கில் அடிக்கடி வீடியோ வெளியிட்டும் வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கனகராஜ் நந்தினிக்கு தொலைபேசியில் அழைத்துள்ளார். அப்போது நீண்ட நேரம் அழைப்பு பிசியாக இருந்ததால் நேற்று மதியம் நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு சென்று அங்கு நீண்ட நேரம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ஆத்திரமடைந்த கனகராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் தலை மற்றும் உடலில் சராமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயடைந்த நந்தினியை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் மருத்துவமனை செல்லும் வழியிலியே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு கனகராஜை கைது செய்தார். செல்போனால் ஏற்பட்ட விணையால் கணவனே மனைவியை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .