June 1, 2019
மதுக்கரை அருகே சிறுத்தை நடமாட்டம், ஒரே நாளில் இரண்டு நாய்களை அடித்து இழுத்து சென்றதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
கோவை மதுக்கரை வனப்பகுதி அருகே உள்ள சூட்டிங் ரேன்ஞ் பகுதியை சேர்ந்தவர் அஜில். இவர் தனது வீட்டில் இரண்டு நாய்களை வளர்த்து வந்தார். வழக்கமாக நாயை மாலை நேரத்தில் வீட்டின் கேட்டில் கட்டி வைப்பார். அதே போல் நேற்று முன் தினம் மாலை நாயை வீட்டின் கேட்டில் கட்டி வைத்து விட்டு உள்ளே வந்துள்ளார். அப்போது திடீரென நாயின் சத்தம் கேட்டுள்ளது. பின் வெளியே சென்று பார்த்த போது நாயை சிறுத்தை ஒன்று அடித்து வனப்பகுதிக்குள் இழுத்து சென்றுள்ளது. பின் மீண்டும் அதே பகுதிக்கு வந்த சிறுத்தை தெரு நாய் ஒன்றை அடித்து இழுத்து சென்றது. அடுத்ததடுத்து இரண்டு நாய்களை சிறுத்தை அடித்து இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய அஜில், இந்த ஒரு மாதத்தில் மட்டும் 5 க்கும் மேற்பட்ட ஆடுகள், நாய்களை சிறுத்தை அடித்து இழுத்து சென்றுள்ளதாகவும், அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் வர கூடிய அபாயம் உள்ளதால் வனத்துறையினர் சிறுத்தை வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து சம்பவ இடத்தில் மதுக்கரை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று மாலையும் வனப்பகுதியில் உள்ள மலை மேல் சிறுத்தை அமர்ந்திருத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் மக்கள் வெளியே வர அச்சமடைந்துள்ளனர்.