May 30, 2019
தண்டோரா குழு
இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை – அவினாசி சாலை சந்திப்புகளில் அதிநவீன ஸ்மார்ட் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் உள்ள கூட்டரங்கில் இந்தியாவிலேயே முதன் முறையாக நவீன ஸ்மார்ட் கேமராக்களை கோவையில் பொருத்துவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, காவல்துறையினர் பேசும்போது,
பெருகி வரும் வாகனப் பெருக்கங்களினால் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இப்படி சாலை விபத்துகளில் பலியானவர்களில் பெரும்பாலானோர் 15 வயது முதல் 45 வயது சேர்ந்தவர்களே அதிகமாக உள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 3 நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் உயிர் இழக்கின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலை விபத்தில் தமிழகம் மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. இப்படி சாலை விபத்தில் மாட்டிக் கொள்பவர்களில் 70 சதவீதம் பேர் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. இவ்வாறு நடைபெறும் சாலை விபத்துக்கள் பெரும்பாலானவை சாலை விதிகளை கடைபிடிக்காததாலேயே நடைபெறுகிறது. மேலும், சாலை விபத்துக்களை தடுக்க சாலை விதிகளை பின்பற்ற வேண்டும். ஆனால், பெரும்பாலானவர்கள் சாலை விதிகளை பின்பற்றுவதில்லை. ஆகவே, அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உயிர் அறக்கட்டளை சார்பில் கோவை மாநகர காவல் துறையுடன் இணைந்து அவிநாசி சாலையில் உள்ள ஜே.எம் சிக்னலில் இருந்து லட்சுமி மில்ஸ் சிக்னல் வரை மொத்தம் 5 இடங்களில் அதிநவீன ஸ்மார்ட் கேமராக்களை பொருத்தி உள்ளனர். நேற்று முதல் இந்த திட்டம் செயல்பட தொடங்கிவிட்டது.
இந்த கேமராக்கள் அதிநவீன தொழில்நுட்பம் மிகுந்தவை. சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் நபர்களின் நம்பர் பிளேட் மற்றும் அவர்களின் முகத்தை துல்லியமாக பதிவு செய்யும். இதில், விதிமுறை மீறல் நடைபெறும் இடம், நேரம் ஆகியவையும் துல்லியமாக இடம்பெற்றிருக்கும்.அதேபோல, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், சிவப்பு விளக்கை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை இவை பதிவு செய்யும். பதிவு செய்யப்படும் விவரங்கள் போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்பட்டு, விதிமுறை மீறியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல, தொடர்ந்து சாலை விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து பட்டியலிட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க இந்த கேமிரா உதவும், என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், கேமராக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.