May 29, 2019
தண்டோரா குழு
பாரம்பரிய நெல் ரகங்களை காக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்த நெல் ஜெயராமன் குறித்த விஷயங்களை 12-ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் பாடமாக தமிழக அரசு சேர்த்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கட்டுமேடு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நெல் ஜெயராமன். இவர் அழிவின் விளிம்பில் இருந்த பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்தவர். சுமார் 174 அறிய நெல் வகைகளை பாதுகாத்தவர். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழ்வாரின் சீடரான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை தேடித் தேடி சேகரித்து பாதுகாத்துள்ளார். இதுமட்டுமின்றி ஆண்டுதோறும் நெல் திருவிழா நடத்தி பாரம்பரிய நெல் விதைகள் குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதைபோல் மாநில மற்றும் தேசிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். இதற்கிடையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயராமன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடிக் காத்த ஜெயராமன் குறித்த செய்தி இந்த வருட 12ம் வகுப்பு தாவரவியல் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. நெல் ஜெயராமனின் குறிப்புக்கள் விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிப்படிப்பை முடிக்காத ஜெயராமன் சமூகத்திற்கான தன் பங்களிப்பால் பாடமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.