May 28, 2019
தண்டோரா குழு
கோவையை சேர்ந்த சால்சர் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், சிஎம்எஸ் குழுமத்தின் கெய்சி இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 72.32% பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்களிடமிருந்து 22 கோடி ரூபாய் மதிப்புள்ள 26% பங்குகளை பெற கேட்பு விடுத்துள்ளது.
பங்குகளை கையகப்படுத்த கையிருப்பு மற்றும் கடன் பெறும் வசதியை கொண்டுள்ளது. முறையான ஆவணங்கள் மற்றும் ஒழுங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இது மேற்கொள்ளப்படுகிறது. தேவையான அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதுமட்டுமின்றி பங்குகளை கையகப்படுத்தும் முறைகளுக்கு, மும்பையை சேர்ந்த முதலீட்டு வங்கி நிறுவனமான எம் அன்ட் ஏ, சிஎம்எஸ் மற்றும் சால்சர் நிறுவனங்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
2002ம் ஆண்டு, பஜாஜ் எலக்ட்ரிக்கல் நிறுவனத்திடமிருந்து கெய்சி பங்குளை வாங்க சிஎம்எஸ் குழுமத்திற்கு சிங்கி ஆலோசகர்கள் உதவி புரிந்தனர்.கெய்சி நிறுவனம், மும்பை அருகில் உள்ள அம்பர்நாத்தில் உற்பத்தி தொழிற்சாலையை கொண்டுள்ளது. ரோட்டரி சுவிட்ச், ரோட்டரி கேம் சுவிட்ச், மைக்ரோ மற்றும் டோக்ள் சுவிச், வெதர் டைட் சுவிட்ச், பிரேக் கன்ட்ரோல் சுவிட்ச், கவுன்ட்டர்ஸ், ப்யூஸ் பிட்டிங்ஸ், போன்ற தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தை கையகப்படுத்தியதால், சால்சர் நிறுவனத்திற்கு ரயில்வேயில் தடம் பதிக்கவும், இந்திய அளவில் விநியோகத்தொடரை விரிவுபடுத்தவும் உதவிகரமாக இருக்கும்.
இது குறித்து சால்சர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் துரைசாமி கூறுகையில்,
‘‘ கெய்சி இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 72.32 % பங்குகளை கையகப்படுத்த ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம் என்பதை தெரியப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கேம் ஸ்விட்ச் தயாரிப்பில் முன்னோடி நிறுவனமாக உள்ள இந்த நிறுவனம், எங்களது தொழிற்சாலை பயன்பாட்டு ஸ்விட்ச் விற்பனை சந்தையின் பங்கினை உயர்த்த உதவும். எங்களது திட்டமிடலுக்கு உட்பட்டு கையகப்படுத்தப்படும் இந்த நிறுவனம், எங்களது தயாரிப்புகளுக்கு வலு சேர்ப்பதாக அமையும். சந்தையின் மேலும் ஊடுறுவி விற்பனையை உயர்த்த உதவும். இந்த திட்டமிட்ட கையகப்படுத்துதல், எங்களது பங்குதாரர்களுக்கு நீண்ட கால மதிப்பை அதிகரிக்கும்,’’ என்றார்.