May 28, 2019
தண்டோரா குழு
தேர்தலில் தோற்றாலும் மக்களின் மனங்களை வென்றுள்ளோம் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்ததால் கட்சி தலைவர் ராகுல்காந்தி கடும் அதிர்ச்சி அடைந்தார். தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலக முன்வந்தார். நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விவாதிக்க கடந்த 25ந்தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தனது குடும்பத்தை சேராத ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், அவரது ராஜினாமா முடிவை காரிய கமிட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் கட்சியில் செய்ய வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்வதற்கு ராகுல் காந்திக்கு முழு அதிகாரமும் அளிக்கபட்டது.எனினும், ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்காமல் ராகுல் காந்தி தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராகுல் காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி பெற்ற வெற்றிக்காக மு.க.ஸ்டாலினுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தொலைபேசி வழியே இன்று வாழ்த்து தெரிவித்தனர்.
இதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பும் ராகுல் காந்தியை சமாதானம் செய்தார். கட்சி தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என ராகுல் காந்தியிடம் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால் மக்களின் மனதை வென்றுள்ளோம் என அவரிடம் மு.க. ஸ்டாலின் கூறினார்.