May 27, 2019
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் யானை தாக்கி சிறுமி உள்பட 2 பேர் பலியானதை அடுத்து யானையை விரட்ட கும்கி யானைகள் வரவலைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியில் 40க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த ராஜன் என்ற வேட்டை தடுப்பு காவலரின் மகள் ரஞ்சனா என்பவர் கடந்த 24ம் தேதி இரவு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த சோகத்தில் இருந்து மீளுவதற்குள் நேற்று முன்தினம் இரவு குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை அதே பகுதியைச் சேர்ந்த மாகாளி என்ற 55 வயது முதியவரை தாக்கியது இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து காட்டு யானையை விரட்ட டாப்சிலிப் கோழிக்கமுத்தி முகாமில் இருந்து நேற்று நள்ளிரவு பரணி என்னும் கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு யானையாக சுயம்பு எனும் கும்கி யானையும் வரவழைக்கப்பட்ட பின் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.