May 27, 2019
ஆறு மாதமாக குடிநீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் சோமையம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட திருவள்ளுவர் நகரில் 500 க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் ஆறு மாத காலமாக சரியாக வழங்கப்படாததால், அடிக்கடி சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்டால் மட்டுமே , ஒரு வாரத்திற்கு தண்ணீர் முறையாக வழங்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அரசு அதிகாரிகளிடம் புகாராளித்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால், இப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் உப்புத்தண்ணீரை காசு கொடுத்து வாங்கவேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் கணுவாய் ஆனைகட்டி சாலையில் இன்று காலை மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் பிரச்சனையால் சரியாக வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிரந்தர தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.