May 25, 2019
தண்டோரா குழு
மரணத்தையும் தழுவ தயார் ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன் என திரிணாமுல் காங்., கட்சி தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
நாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மம்தா பானர்ஜி ஆட்சி நடந்து வரும் மேற்குவங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. மம்தாவின் திரிணாமுல் காங்., கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக கட்சியின் அவசரக் கூட்டத்தை மம்தா இன்று கூட்டி இருந்தார். இக்கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
மத்திய படைகள் எங்களுக்கு எதிராக செயலாற்றின. அதனால் நெருக்கடி நிலை உருவாக்கப்பட்டது. இந்து – முஸ்லிம் பிரிவினை ஏற்பட்டது. அதனால் ஓட்டுக்களும் பிரிந்தன. நாங்கள் தேர்தல் கமிஷனிடம் இது குறித்து புகார் அளித்தோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. மரணத்தையும் தழுவ தயார் ஆனால் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன். ராஜஸ்தான், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ., எப்படி இத்தனை இடங்களில் வெற்றி பெற்றது. இதை கேட்க மக்கள் பயப்படுகிறார்கள். ஆனால் எனக்கு பயமில்லை. 6 மாதங்களால் என்னால் பணியாற்ற முடியவில்லை என கட்சியினரிடம் கூறினேன். முதல்வராக தொடர விரும்பவில்லை ராஜினாமா செய்வதாக கட்சியினரிடம் தெரிவிதேன். ஆனால் அதை ஏற்க கட்சியினர் மறுத்து விட்டனர். எங்களின் ஓட்டு வங்கியை அதிகரிக்க நினைக்கிறோம். இடதுசாரிகள் ஓட்டு தான் பா.ஜ.,வுக்கு சென்றுள்ளது என்றார்.