May 22, 2019 து.வெங்கடேஷ்,
மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு இப்பூமியில் உரிமை உள்ளது போலவே மற்ற விலங்கினங்களும்,தாவர இனங்களும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு. பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பது மனிதனின் கடமை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக உலக பல்லுயிர் தினம் ஒவ்வொரு வருடம் மே 22 இல் கொண்டாடப்படுகிறது. உயிரினங்களைப் பாதுகாக்கும் ஒப்பந்தத்தில் இதுவரை 150 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
டிசம்பர் 20, 2000 அன்றுதான் உலக பல்லுயிரின பெருக்க தினமாக ஒவ்வொறு வருடம் மே 22 அன்று கொண்டாடப்பட படவேண்டும் என உலக நாடுகளால் தீர்மானிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் ஐந்து மாநிலங்களை இணைக்கும் அழகிய மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் (Western Gates) “யுனெஸ்கோ’வின் உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இம்மலைத்தொடர் அரபிக்கடலிருந்து வரும் குளிர்காற்றை தடுத்து, மழைப்பொழிவைத் தருகிறது. இதன்மூலமே, தமிழகத்தின் 40% நீர்த்தேவையையும், கேரளத்தின் 100% நீர்த்தேவையையும் நிறைவு செய்யப்படுகிறது. மேற்கு மலை தொடரே நம் மக்களின் வாழ்விற்கு முக்கிய ஆதாரமாக திகழ்வதில் எந்த ஐயமும் இல்லை.
8841-அடி உயரமுடைய ஆனைமுடி மற்றும் பொதிகை மலை என்ற மலை உச்சிகளைக் கொண்ட இம்மலைத் தொடர் உலகில் பல்லுயிரின பெருக்கம் மிக்க பத்தில் ஒன்று ஆகும். இங்குள்ள வன உயிரின சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்கள் போன்றவை பாதுகாக்கப்பட்ட பல்லுயிரின பெருக்கத்திற்கு வழிவகை செய்கிறது.அரிய வகை உயிரினங்கள், மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும் மேற்கு மலை தொடர் உள்ளது. 5000-வகைத் தாவரங்கள், 139-வகைப் பாலூட்டிகள், 508-பறவைகள் 179-நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் இங்கு உள்ளன.இந்த மலைத்தொடரில் மேற்கண்ட உயிரினங்களில் பெறும்பாலானவை இந்த மேற்கு மலை தொடருக்கு சொந்தமானவை. இங்கு தவிர வேறு எங்கும் இவைகளை நாம் காண முடியாது. எனவே இந்த அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க வேண்டியது நமது தலமையான கடமையாகும். வன உயிரினங்கள் என்பது வனத்திற்குள் இருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்களையும் குறிக்கும்.
உலகளவில் அழியும் நிலையில் உள்ள 325-வகை உயிரினங்கள் இங்கே கடும் போராட்டத்திற்கிடையில் உயிர் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மேற்கு மலைத் தொடரிலுள்ள களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் பல உயிரினங்களுக்கு தாயாகவும் விளங்குகிறது.
யானை, புலி, மான், காட்டெருமை, ஐந்து வகை குரங்கினங்கள் என பலவகை வனவிலங்குகளை கொண்டது இந்த புலிகள் காப்பகம் மற்றும் மேகமலை, ஸ்ரீவில்லிபுத்தூர் சரனாலயங்கள் ஆகும். தற்போது இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடங்கள் கொண்டுள்ள இந்த வன உயிரினங்களை கண்டிப்பாக நாம் பாதுகாத்தே ஆக வேண்டும்.இன்றைய தினத்தில் நாம் கொண்டுள்ள இந்த அரிய பல்லுயிரின பெருக்கம் உடைய வனப்பகுதியினை பாதுகாத்து அதன் மூலம் நாம் பயனடைவது தான் முக்கிய குறிக்கோள் ஆகும். இன்றைய தினத்தில் நாம் கொண்டிருக்கும் இந்த பல்லுயிரினப் பெருக்கத்தினை மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதன் மூலம் அதை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே முதன்மையான செயல் ஆகும்.
– து.வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர்