May 9, 2019
தண்டோரா குழு
பல்வேறு முக்கிய குற்ற வழக்குகளில் எதிரிகளை பிடிக்க பங்கற்றியதற்காக உதவி ஆய்வாளர் சாஸ்தாவிற்கு கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழை அளித்துள்ளார்.
நாடு முழுவதும் கடந்த 5-ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ , மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை தேர்வு எழுதுவதற்காக நேரம் என்பதால் மாணவர்கள் வேகம் வேகமாக வந்தனர். இதில், ஒரு மாணவன் தேர்வு எழுத புகைப்படத்தை எடுக்காமல் வந்து விட்டார். இதனால், பதற்றமடைந்த மாணவன் தவித்துக்கொண்டிருந்த பொழுது, தக்க நேரத்தில் சரவணன் என்ற காவலர், புகைப்படம் எடுக்க ரூ. 40 ரூபாய் கொடுத்து உதவியுள்ளார். இதனால் காவலருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்தது.
இந்நிலையில், மாணவனுக்கு, தக்க நேரத்தில் உதவிய காவலர் சரவணனுக்கு பாராட்டுகளை கூறி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அதைபோல், உதவி ஆய்வாளர் சாஸ்தா கடந்த இரண்டு வருடங்களில் நடைபெற்ற முக்கிய குற்ற வழக்குகளில் எதிரிகளை பிடிக்க பங்கற்றியதற்காகவும் உதவி ஆய்வாளர் கந்தசாமி போத்தனூர் ஆதாயக்கொலை வழக்கில் எதிரிகளை பிடிக்க பணியாற்றியதற்காக காவல் ஆணையாளர் சுமித்சரண் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
மேலும், இந்த பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் போது, மாநகர காவல் துணை ஆணையாளர் எல். பாலாஜி சரவணன் மற்றும் உளவுப் பிரிவு உதவி ஆணையாளர் சௌந்தரராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.