May 9, 2019
தண்டோரா குழு
கோவை – மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையத்தில் வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கரத்தில் வந்த ஒருவர் பலியாகினார்.
கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு (சத்ய ஸ்ரீ டிரான்ஸ்போர்ட்) என்ற தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்யாலயா கல்வி நிறுவனம் அருகே பேருந்து வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அதைபோல் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியிலிருந்து எதிரே இருசக்கர வாகனம் வந்து கொண்டிருந்தது. அப்போது வேகமாக சென்ற பேருந்து எதிரே இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஸ்டீபன் பிரபு எனும் 22 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இதையடுத்து பேருந்துக்குள் அடியில் இருந்த நபரை எடுப்பதற்காக பொக்லைன் உதவியுடன் பேருந்தை கவிழ்த்தனர். பின்னர் இறந்த நபரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை – மேட்டுபாளையம் சாலையில் தனியார் பேருந்துக்கள் போட்டிபோட்டுக்கொண்டு அசுர வேகத்தில் செல்வதால் இது போன்று அடிக்கடி விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. மின்னல் வேகத்தில் செல்லும் தனியார் பேருந்துகளால், சாலைகளில் பயணிக்கும் இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றசாட்டியுள்ளனர்.