May 9, 2019
தண்டோரா குழு
சூலூரில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் முன்னேற்ற சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
சூலூர் சட்டமன்றத்திற்கு மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் மற்றும் கட்சியினரின் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வாரம் சூலூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இந்நிலையில், சூலூரில் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள தடை விதிக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அருந்ததியர் முன்னேற்ற சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள மனுவில்,
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக இருந்து வந்தார்.கடந்த ஏப்ரல் 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற பாலமுருகன் அடுத்த நாள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். பாலமுருகன் உயிரிழப்பை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரைக்கு சென்ற பாலமுருகன் உயிரிழந்ததற்கு கமல்ஹாசன் ஏன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகம் என்ற காரணமா? தொண்டர்களையே கண்டு கொள்ளாத கமல்ஹாசன் மக்கள் பிரச்சனைகளை எப்படி போக்குவார். எனவே, இடைத்தேர்தலையொட்டி சூலூர் தொகுதியில் பரப்புரை செய்ய மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசனுக்கு தடை விதிக்க வேண்டும் வலியுத்தியுள்ளனர்.