May 8, 2019 தண்டோரா குழு
தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது 46 பூத்களில் தவறு நடந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள 46 ஓட்டுப்பதிவு மையங்களில் வைக்கப்பட்ட இயந்திரங்களில் தவறு நடந்துள்ளது. அங்கு தேர்தல் அன்று, மாதிரி வாக்குப்பதிவு முறையாக நடக்கவில்லை. அப்போது சில அதிகாரிகள் தவறு செய்தது தெரியவந்துள்ளது. இது குறித்து, உடனடியாக தலைமை ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம். இங்கு மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கும். தேனிக்கு 50 வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஈரோட்டிற்கு 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடும் பட்சத்தில் அதற்கு தயாராக இருக்கும் வகையில் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13 மாவட்டங்களில் தேனி, ஈரோட்டில் மட்டும் தான் இயந்திரங்கள் பற்றாக்குறை உள்ளது. மறுஓட்டுப்பதிவு குறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். மறு வாக்குப்பதிவு நடக்குமா என்பதை உறுதியாகவே சொல்ல முடியாது.தமிழகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்களின் முழு தகவல்களை தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. ஏற்கனவே 10 வாக்குச் சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு தமிழக தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தேனிக்கு வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது தொடர்பாக திமுகவுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த ரூ. 156 கோடியில் ரூ.144 கோடி திருப்பி அளிக்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு சாஹூ கூறினார்.