May 1, 2019
தண்டோரா குழு
திமுக தலைவர் ஸ்டாலின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை திமுக தலைவர் ஸ்டாலினும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அகற்ற முயற்சித்து வருகிறார்கள்.ஸ்டாலினுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ரகசிய உறவு உள்ளது.இருவரும் மறைமுகமாக சந்தித்து பேசி வருகிறார்கள்.இதற்கு ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஏஜென்டாக செயல்பட்டு வருகிறார்.
அதிமுகவிற்கு எதிரான 3 எம்.எல்.ஏ பதவி நீக்கம் செய்ய நோட்டீஸ் அனுப்பினால், திமுக ஏன் பதட்டமடைகிறது. டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஸ்டாலின் செயல்படுகிறார். செந்தில்பாலாஜியை டிடிவி தினகரன் தான் திமுகவிற்கு அனுப்பி வைத்தார். 22 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வெற்றிபெறும்.
அமமுக ஒரு கம்பெனி ,தேர்தல் காரணத்தினால் தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். நோட்டீஸ் அனுப்பப்பட்ட 3 எம்.எல்.ஏ.க்களும் அமமுக உறுப்பினராகி மாவட்ட செயலாளராக உள்ளனர்.அதிமுக ஆட்சிக்கு எதிராக செயல் பட்டால் தமீமுன் அன்சாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
மேலும்,சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடையும். நம்பிக்கையில்லா
தீர்மானத்தின் போது 30 திமுக எம்.எல்.ஏ.க்கள் அதிமுக ஆட்சிக்கு ஆதரவாக வாக்காளிப்பார்கள். சூலூர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி அதிமுகவில் தான் இருக்கிறார்.வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக தேர்தல் ரத்து செய்ய காரணமாக இருந்த துரைமுருகன் மீது ஸ்டாலின் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.