May 1, 2019
தண்டோரா குழு
கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில்
தண்ணீர் தேடி வந்த காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த காருண்யா நகர் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா. இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் தனது மனைவி சின்னமணியுடன் வசித்து வருகிறார். சுப்பையா வெளியே சென்ற நிலையில் சின்னமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் இரவில் மின்சாரம் தடைபட்டதால் வீட்டுக்கு வெளியே சின்னமணி படுத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை சுப்பையாவின் தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வீட்டுக்கு வெளியே படுத்து இருந்த சின்ன மணியை தாக்கி தூக்கி வீசியுள்ளது சம்பவ இடத்திலேயே சின்னமணி உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது உறவினர்கள் வீடு திரும்பியபோது சின்னமணி படுகாயங்களுடன் உயிரிழந்திருப்பதும் அங்கிருந்த பயிர்களை யானை சேதப்படுத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து உடனடியாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு காருண்யாநகர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சின்னமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வந்த போளுவாம்பட்டி வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் சின்னமணி காட்டு யானை தாக்கி உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு மாதங்களாக வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவுவதால் தண்ணீர் தேடி யானைகள் மலையோர கிராமங்களுக்கு வருவது வாடிக்கையாக உள்ள நிலையில் தண்ணீர் தேடி வந்த யானை தாக்கி மூதாட்டி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.